தடுப்பு அமைக்காமல் கட்டடம் இடிப்பு: ஸ்ரீபெரும்புதுாரில் அச்சம்

தடுப்பு அமைக்காமல் கட்டடம் இடிப்பு: ஸ்ரீபெரும்புதுாரில் அச்சம்

கட்டிடம் இடிக்கும் பணி

ஸ்ரீபெரும்புதுாரில் உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டடம் இடிப்பதால் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் முக்கிய வழித்தடமாக காந்தி சாலை உள்ளது. இந்த சாலையில், தனியார் மருத்துவமனை, வங்கிகள், பூக்கடை மற்றும் ஏராளமான வணிக கடைகள் உள்ளன.

இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இச்சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே, தனியாருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டடம் உள்ளது. தற்போது, வேறு பயன்பாட்டிற்காக கட்டடம் முழுதும் இடிக்கும் பணி நடந்து வருகிறது. அவ்வாறு இடிக்கும் போது, கட்டடத்தில் இருந்து வெளியேறும் துாசி, காற்றில் பறந்து வாகன ஓட்டிகளில் கண்ணில் விழுகிறது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல், நடந்து செல்லும் பாதசாரிகளின் மீது விழும் துாசியால், அவர்களின் கண்கள் பாதிக்கப்படுகிறது. சுவாச பிரச்னையும் ஏற்படுகிறது.

மேலும், இவ்வழியாக குடிருப்புவாசிகள், கல்லுாரி, பள்ளி மாணவ - மாணவியர் நடந்து செல்கின்றனர். உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டடம் இடிப்பதால் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, பாதுக்காப்பான முறையில் தடுப்பு அமைத்து கட்டடத்தை இடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags

Next Story