தேன்கனிக்கோட்டை அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தேன்கனிக்கோட்டை அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கிராம தேவதைகளுக்கு திருவிழா


தேன்கனிக்கோட்டை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளாக மூன்று கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி வாழவும் கிராம தேவதைகளுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு மணியம்பாடியில் உள்ள கிராம தேவதைகளான பசுவேஸ்வர சுவாமி, மல்லேஸ்வர சுவாமி, வீரபத்திர சுவாமி, பட்டாளம்மன், ஓம்காளியம்மன், மாரியம்மன், மேலுர் கிராமத்தில் உள்ள சிக்கம்மா, தொட்டம்மா, சனி மாத்மா, வெங்கடராம சுவாமி, ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள பெருமாள் திம்மராயசுவாமி, சென்றாயசுவாமி, வீரபத்திர சுவாமி உட்பட பல்வேறு கிராம தேவதைகளை அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மணியம்பாடி கிராமத்திற்கு பக்தர்கள் சுமந்து வந்தனர்.

அப்பகுதியில் உள்ள கோவில் திடலில், அனைத்து கிராம தேவதைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் பாரம்பரிய நடமாடினர். அதைத்தொடர்ந்து 6 க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து விட்டு மரக்கிளைகளில் தேங்காயை கட்டி தொங்க விட்டு அதை உடைக்க அம்பு விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன் பின்னர் விரதம் இருந்த 101 பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அருள் வந்து ஆடியபடி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்று கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா காரணமாக மூன்று கிராமங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ––––––

Tags

Next Story