மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சங்ககிரி அருகே மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி சென்றாயனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றஸ்ரீ கொங்கனூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் விரதம் இருந்து தினந்தோறும் மாரியம்மனுக்கு நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இந்நிலையில் பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் எடுத்தல் பூங்கரகம் எடுத்தல் கடவுள் வேடம் அணிந்து கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டு முக்கிய கிராமங்களின் வழியாக கோவில் சன்னதி வந்தடைந்தது.

இதனையடுத்து சரபங்காநதியில் பக்தர்கள் புனித நீராடி அலகு குத்தி சிறுவர்கள் உடம்பில் சேற்று மண்ணை தடவிக்கொண்டு சேத்து முட்டி சட்டி எடுத்தல், 1008 முறை நிலத்தில் படுத்து எழுந்து வருதல், பொங்கல் வைத்தல்,மாவிளக்கு தட்டம் எடுத்தல், முடி காணிக்கை செய்தல் கெடா வெட்டுதல்,அக்னி கரகம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story