இணைபிரியாத சகோதரர்கள்-இறப்பு

இணைபிரியாத சகோதரர்கள்-இறப்பு

 இணைபிரியாத சகோதரர்கள்-இறப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அண்ணன் உயிர் பிரிந்த செய்தியை கேட்ட தம்பி மாரடைப்பால் மரணம், இறப்பிலும் இணைபிரியாத சகோதரர்கள். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பசுமடத் தெரு பகுதியில் வாழவந்தான் என்பவரது மகன்கள் வாசகன் (80) மற்றும் முருகேசன் (61). வாசகனின் மனைவி சீதாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருடைய தம்பி முருகேசன் (61) கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வாசகன் மற்றும் முருகேசன் இருவரும் சிறுவயது முதலே இணை பிரியாத சகோதரர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வாசகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (27.01.24)அதிகாலையில் திடீரென வாசகன் இயற்கை மரணம் அடைந்தார். அவரது தம்பி முருகேசன் காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவரது அண்ணன் இறந்து விட்டதாக தகவல் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட முருகேசன் அதிர்ச்சியடைந்த நிலையில் அவருக்கு உடனடியாக நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது உறவினர்கள் முருகேசனை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முருகேசன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஒரே நாளில் அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் திருச்சுழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இணைபிரியாத சகோதரர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்கள் உடல்கள் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது அந்தப் பகுதியில் பொதுமக்களிடையே சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story