தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்த மாவட்ட ஆட்சியர்

தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்த மாவட்ட ஆட்சியர்
வாகனங்கள் ஆய்வு
கோயம்புத்தூரில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகளை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் போக்குவரத்து துறையின் சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.இந்த தணிக்கையில் வாகனங்கஎ வேக கட்டுப்பாட்டு கருவிகள், முதலுதவி பெட்டிகள், இருக்கைகள் வசதிகள் சரியாக உள்ளனவா என அனைத்து வகையான சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையின் சார்பில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தனியார் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் இன்றைய தினம் கோவை மாநகருக்கு உட்பட்ட 203 பள்ளிகளை சேர்ந்த 1323 வாகனங்கள் தணிக்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த பேருந்துகளில் குறைபாடுகள் தென்பட்டால் அது சரி செய்யப்பட்ட பின்பே தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.இங்கு வந்துள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர் ஓட்டுனர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுவதாகவும் தணிக்கைக்கு அனைத்து பள்ளிகளும் அவர்களது வாகனங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தினார். வாகனத்தின் இருக்கை எண்ணிக்கைக்கு தகுந்தார் போலவே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் அதனை மீறக்கூடாது எனவும் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர் அவற்றை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பல்வேறு தனியார் பள்ளிகளில் பள்ளி வாகனங்கள் இல்லாமல் தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் அதனை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அதை மீறி பெற்றோர்கள் சொந்த விருப்பத்தில் தனியார் வாகனத்தில் அனுப்பினால் வாகனத்தில் உள்ள இருக்கையின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அனுப்ப வேண்டும் எனவும் அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story