திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றால் மண்டப உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளனர்.


திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றால் மண்டப உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 ன் படி, பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், மேலும் குழந்தை திருமணம் நடத்தினாலும் அல்லது ஆதரித்தாலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கு திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருவோர்களுக்கு மணமகன் மற்றும் மணமகள் அவர்களின் ஆதார் அட்டை மூலம் பிறந்த தேதி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணம் நடைபெற வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், வரும் 23ம் தேதி மே மாதம் முதல் திருமண மண்டபம், சமுதாயக் கூடம் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் மணமகன் மற்றும் மணமகள் அவர்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் திருமண பத்திரிகை ஆகிவற்றை உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் பதிவேடுகள் அல்லது கோப்புகளாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குழந்தை திருமணம் என தெரியவந்தால், குழந்தைகளுக்கான உதவி எண் 1098, மகளிர் உதவி எண்கள் 181 மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும், மேலும், இப்புகார் மற்றும் புகார்தாரர் பற்றிய இரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் அணுகுமாறு என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story