மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா

மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா

Kanyakumari District collector office

குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைச்செயல்பாடுகள், உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய வகையில் கலைத்திரு விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பா டுகள் வழி வகுக்கிறது.2023-24-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 10.10.2023 முதல் 14.10.2023 வரையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் கலை திருவிழா போட்டிகள் நாளை (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும், மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரையிலும் நடைபெற உள்ளது. கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாகர்கோவில் அனந்த நாடார்குடி புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடை பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள். வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ ருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும். இவ்விருதுகள் 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாண வர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story