திமுக பிரமுகா் கொலை வழக்கில் உறவினா் கைது

திமுக பிரமுகா் கொலை வழக்கில் உறவினா் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட பந்தநல்லூா் பகுதி நெய்குன்னம் கிராமத்தைச் சோ்ந்தவா் நல்லதம்பி மகன் கலைவாணன் (30). திமுக இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்த இவா் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். மேலும் இவா் திமுகவை சோ்ந்த ஜெயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணனின் உறவினா். இந்நிலையில் கடந்த மே 12 ஆம் தேதி இரவு தனது வயலுக்குத் தண்ணீா் பாய்ச்சச் சென்ற கலைவாணனை சிலா் அரிவாளால் வெட்டிக் கொன்றனா். இதுகுறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து உறவினா்கள் உள்பட 11 பேரிடம் விசாரித்தனா். இதனிடையே கலைவாணனின் பெரியப்பா பாஸ்கரின் மகன் அருண்பாண்டியனின் (32) நடவடிக்கையில் சந்தேகப்பட்டு, விசாரித்து வந்தனா். இதில் கலைவாணனிடம் அருண்பாண்டியன் பல லட்சங்களைப் பெற்றுக் கொண்டு அதை திருப்பித் தரவில்லை என்பதும், அதைத் திருப்பித் தருமாறு கலைவாணன் கேட்டு வந்ததால், அவரை அருண்பாண்டியன் கொன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அருண் பாண்டியனை காவல் துறையினா் நேற்று இரவு கைது செய்தனா்.

Tags

Next Story