திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்

திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்

தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் , கிளியனூர் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த கிளியனூரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவம், கடந்த மாதம் 24-ந்தேதி தொடங் கியது. இதில் மறுநாள் (25-ந்தேதி) பக்காசூரசனை சம்ஹாரம் செய்தல் நிகழ்ச்சியும், 26-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதை தொடர்ந்து கரக உற்சவம், மாடு விரட்டுதல், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. மேலும் நேற்று முன்தினம் மாங்கல்யம் கட்டுதல் நடந்தது.

விழாவில் நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார், விழாவில் வானூர் தொகுதி எம்.எல்.ஏ.சக்கரபாணி கலந்து கொண்டு தேரின் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாகசென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று(வியாழக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story