குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால்  வீணாகும் குடிநீர்

வீணாகி வரும் குடிநீர் 

திருமருகலில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் ஒடி வீணாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே டேங்கில் சேகரிக்கப்படுகிறது.

இதில் இருந்து ராட்சத குழாய் மூலமாக திட்டச்சேரி,நாகூர்,நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திருமருகல் சீராக்குளம் மெயின் ரோடு மற்றும் கீழத்தெரு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்கள் ஆகிறது.அதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இது வரை சரி செய்யாததால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது.

மேலும் இரவு நேரத்தில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பெறும் மருங்கூர்,சேகல்,நெய்குப்பை,வேளங்குடி, கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.மேலும் சாலையோரம் வீணாகும் குடிநீர் பள்ளங்களில் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story