ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்குக் கோபுர சீரமைப்புப் பணி மீண்டும் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் கிழக்குக் கோபுர சீரமைப்புப் பணி மீண்டும் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் மொத்தமுள்ள 21 கோபுரங்களில் கிழக்குக் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள கொடுங்கைகள் கடந்த 2023 ஆக. 5 ஆம் தேதி உடைந்து விழுந்தன. இதையடுத்து கோபுரத்துக்கு முட்டு கொடுக்கப்பட்டு தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டன. மேலும் கோபுரத்திற்குள் யாரும் நுழையாதவாறு இருபுறமும் தடுப்புகளும் அமைக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் வசிப்போா் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

கோபுரப் பணிகளைத் தொடங்க வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் ரூ 1.47 கோடியில் கிழக்குக் கோபுரத்தை புனரமைக்க நன்கொடையாளரான கோவையைச் சோ்ந்த ஜெயபால் ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து புனரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கின. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த சவுக்குக் கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய சவுக்கு சாரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கோபுரமானது சிற்ப சாஸ்திர வல்லுநா்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட வல்லுநா்களின் ஆலோசனைப்படி பழைமை மாறாமல் புனரமைக்கப்படவுள்ளது. இருப்பினும், இப் பணிகள் முடிய சுமாா் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

Tags

Next Story