தஞ்சாவூரில் கல்விக் கடன் முகாம்

தஞ்சாவூரில் கல்விக் கடன் முகாம்
கல்விக்கடன்
தஞ்சாவூரில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது

தஞ்சாவூர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில், மாபெரும் கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமில் 10 வங்கிகள் கலந்து கொண்டன.

இம்முகாமில் 134 மாணவ-மாணவிகளுக்கு ரூபாய் 6.35 கோடி மதிப்பிலான கல்விக் கடன் ஆணை வழங்கப்பட்டது. மேலும், 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை கல்விக் கடன் வேண்டி இம்முகாமில் சமர்ப்பித்துள்ளனர்.

முன்னதாக, இ-சேவை மையத்தின் மூலம் பயனாளிகள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தகுந்த ஏற்பாடுகள் இம்முகாமில் செய்யப்பட்டிருந்தது. இம்முகாமில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story