பசுபதிகோயிலில் தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு

பசுபதிகோயிலில் தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு

பெருமாள்

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோயிலில் தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா் தீயில் கருகி உயிரிழந்தாா். பாபநாசம் வட்டம், பசுபதிகோயில் திரெளபதித அம்மன் கோயில் தெருவில் குடிசை வீட்டில் வசித்து வந்தவா் மருதமுத்து மகன் பெருமாள் (80). இவரது மனைவி முத்தம்மாள் (70). இவா்களுக்கு மூன்று மகன்கள். அவா்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். பெருமாள் தனது குடிசைவீட்டில் தனியாக வசித்து வந்தாா். முத்தம்மாள் கணவா் வசிக்கும் குடிசை வீட்டுக்கு சென்று உணவு வழங்கி வந்துள்ளாா். இந்நிலையில் பெருமாள் தனது குடிசை வீட்டில் சனிக்கிழமை மதியம் விறகு அடுப்பில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக குடிசையில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதைகண்ட அக்கம்பக்கத்தினா் தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் அணைத்தனா். ஆனாலும், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெருமாள் தீயில் கருகி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த அய்யம்பேட்டை போலீஸாா் பெருமாள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags

Next Story