மாமரங்களை சேதப்படுத்திய யானைகள்: நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டு யானைகள் மாமரங்களை சேதப்படுத்தியதற்கு நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அத்திகோயில் பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை,காட்டெருமை, சிறுத்தை,புலி,மான், மிளா,கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாம்பல் நிற அணிகள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் இயங்கி வருகிறது. இந்நிலையில் அத்தி கோயில் பகுதியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை வேரோடு பிடுங்கியம், கிளைகளை ஒடித்தும் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாமரங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் அடிக்கடி வருவதாகவும் இது குறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் வனவிலங்குகளை விரட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். யானைகள் தோப்பிற்குள் வரா வண்ணம் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் , மின்வேளி அமைக்க மானியம் வழங்கவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story