ஹைட்ராலிக் தடுப்பை முறையாக பயன்படுத்த வலியுறுத்தல்
வேகத்தடை
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய சிற்பங்களில், கடற்கரை கோவில் ஒன்று. அதன் நுழைவாயில் பகுதி, விசாலமாக உள்ளது. அங்கு சுற்றுலா, உள்ளூர் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், வாகனங்கள் நுழைவது, வெளியேறுவது என, நெரிசல் ஏற்படுகிறது.
பயணியருக்கு இடையூறு ஏற்படுவதால், எளிதில் செல்ல இயலாமல் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் வாகனங்கள் நுழைவதை தடுக்கவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது. தொல்லியல் துறையின் பரிந்துரையில்,
'ஹேன்ட் இன் ஹேன்ட்' நிறுவனம், 20 அடி நீளத்திற்கு, 'ஹைட்ராலிக் போல்லர்டு' என்ற தடுப்பை, ஓராண்டிற்கு முன் அமைத்தது. 'ஹைட்ராலிக்' சாதனம் வாயிலாக, தரைமட்டத்திற்கு கீழே தடுப்பை இறக்கி நடைபாதையாக மட்டும் அனுமதிக்கவும், வாகனங்கள் நுழைய முயன்றால், தரைமட்டத்திற்கு மேலே தடுப்பை எழுப்பி, நுழையாமல் தடுக்கவும், இத்தகைய தடுப்பு அமைக்கப் பட்டது.
ஆனால், முறையாக அமைக்கப்படாததால், தடுப்பு செயல்படவில்லை. பயணியர் நெரிசல் நேரத்தில், எளிதில் கடக்க இயலாமல் அவதிப்படுகின்றனர். தடுப்பில் கால் இடறி பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஹைட்ராலிக் தடுப்பை முறையாக பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.