சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டும் பணி - பொதுமக்கள் அதிர்ச்சி

சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டும் பணி - பொதுமக்கள் அதிர்ச்சி
சர்வீஸ் சாலை முழுதையும் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டும் பணி
கூடுவாஞ்சேரி அருகே சாலையை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் சுற்றுச்சுவர் கட்டி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரம் சந்திப்பு அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடம் மற்றும் இடம் உள்ளது. அந்த கட்டடத்தின் முன் உள்ள சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து, அதில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தனியார் துவங்கியுள்ளது, அப்பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது: கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் பேருந்து நிறுத்தம் அருகில், தனியாருக்கு சொந்தமான இடத்தின் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சர்வீஸ் சாலையில், தாம்பரம் நோக்கி வரும் பேருந்துகள் நின்று பயணியரை ஏற்றி செல்லும். சாலை பராமரிப்பு பணிக்காக, இங்கு இருந்த பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து, அதன் அருகில் உள்ள சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்க, தனியார் கட்டட உரிமையாளர் முயற்சிக்கிறார்.

தற்போது, அவரது இடத்திற்கு முன் உள்ள சர்வீஸ் சாலை முழுதையும் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கோடு, சுற்றுச்சுவர் கட்டும் பணியை துவங்கியுள்ளார். இதை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானப் பணியை நிறுத்த, உரிய நடவடிக்கை எடுத்து, சர்வீஸ் சாலையை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story