அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் சேர்க்கை

அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் சேர்க்கை
அக்னிபாத் விமானப்படை
அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 17.01.2024 முதல் 06.02.2024 வரை இணையவழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கீழ்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களுக்கான இணையவழித்தேர்வு 17.03.2024 அன்று முதல் நடைபெறவுள்ளது. 02.01.2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 02.07.2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித் தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன், ஆங்கிலத்தில் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோ மோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும்,பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது மூன்று முறைகளை கொண்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது.

இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்திய விமானப்படை அக்னிபாத்தின் இணையதளத்தில் https://agnipathvayu.cdac.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள்; அதிகளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story