வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி!

வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி!

வின்பாஸ்ட் 

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நிறுவனங்கள், ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக 1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story