சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவிலில் ஆய்வு!

திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நஞ்சராயன்குளம் மற்றும் சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுற்றுலா மேம்பாட்டு திட்டம் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் பகுதியை ஆய்வு செய்த பின்னர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் ஆனது திருப்பூர் மாநகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரையில் திருப்பூர் மாநகரத்தை சுற்றி பொழுதுபோக்கு அம்சம் கொண்ட இடங்கள் அதிக அளவில் இல்லை. தற்போது ஆண்டிப்பாளையம் குளம் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஆண்டிபாளையம் சுற்றுலா தளத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது.அதுபோல நஞ்சராயன் குளம் பகுதியிலும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

7.5 கோடி நிதி ஒதுக்கீடு முதல் கட்டமாக வனத்துறையின் சார்பில் 7.5 கோடி மதிப்பீட்டில் திட்டக் கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துருவின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் நஞ்சராயன் குளம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வனத்துறையின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட கருத்துருவில் குளப்பகுதியை சுற்றி வேலி அமைத்தல், வரவேற்பு நுழைவு வாயில், நடைபாதை, தகவல் விளக்க கூடம், ஆவண மையம், நுழைவு சீட்டு வழங்கும் இடம், சூழல் வணிக வளாகம், புத்துணர்வு மையம்,சிறிய திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் பூங்கா, கண்காணிப்பு கோபுரம், சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வகையில் பறவைகள் மரவீடு அமைப்பு தங்குமிடம், குடிநீர் வசதி ,கழிவறை வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

வனத்துறை மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டக் கருத்துருவில் மேற்கண்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்துவதற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படின் வனத்துறையானது, சுற்றுலாத்துறைக்கு கருத்துரு சமர்ப்பிக்கும் பட்சத்தில் மேற்கண்ட பணிகளை செயல்படுத்திட உரிய நிதி ஒதுக்கீட்டை சுற்றுலா துறை மூலம் பெற்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். சுக்ரீஸ்வரர் கோவில் மேலும் நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் சுமார் 5000 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தினால் உள்ளூர் பொதுமக்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறப்பான சுற்றுலாத்தலமாக நஞ்சுராயன்குளம் பறவைகள் சரணாலயம் அமையும்.

மேலும் இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி அடையும் போது இங்குள்ள மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.மேலும் திருப்பூர் பகுதிக்கு சுற்றுலாத்தலமாக மட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பறவைகளைப் பற்றி பல்வேறு விஷயங்களை கற்கும் இடமாக மாறும் என்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தெரிவித்தார். மேற்கண்ட ஆய்வின் போது வனச்சரக அலுவலர் சுரேஷ், திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் குளோபல் பூபதி, திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி சங்க நிர்வாகிகள் நவீன், சந்தோஷ் ,திருப்பூர் இயற்கை கழகத்தின் நிர்வாகிகள், நஞ்சராயன்குளம் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story