கூடுதல் கட்டணம் வசூல்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கூடுதல் கட்டணம் வசூல்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  கோரிக்கை!

பைல் படம்

திருநெல்வேலி -திருச்செந்தூர் மார்க்கம் செல்லும் அரசு, தனியார் பேருந்துகளை ஸ்ரீவைகுண்டத்திற்குள் செல்ல வலியுறுத்தியும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலிருந்து திருச்செந்தூருக்கு ஸ்ரீவைகுண்டம் வழியாக அரசுமற்றும் தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு சென்றுவரும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் பயணிகளை புதுக்குடி பாலத்தின் அருகேயே இறக்கிவிட்டு செல்வதால் ஸ்ரீவைகுண்டத்தை சார்ந்த பெண்கள் குழந்தைகள்,மாணவ மாணவிகள் உட்பட அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

மேலும் இரவு நேரங்களிலும் கூட பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் இதுபோன்று புதுக்குடி பாலத்தின் அருகே இறக்கிவிடுவதால் வழிப்பறி உள்ளிட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்துடனேயே ஆற்றுப் பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இனிமேல் ஸ்ரீவைகுண்டத்திற்குள் பேருந்து செல்லும் என்றும் அவ்வாறு செல்லாத பேருந்துகளுக்கு ஆர்டிஓ அவர்களால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டை நடத்துனர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏறியதாக பயணச்சீட்டு வழங்காமல் கருங்குளத்தில் இருந்து ஏறியதாகவே கூடுதல் கட்டணத்துடன் பயணச் சீட்டு வழங்குகிறார். சென்ற வாரம் திருச்செந்தூர் கோவிலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஸ்ரீவைகுண்டத்தைச் சார்ந்த பெண் பக்தரின் கையிலிருந்த டிக்கெட்டில் கருங்குளத்தில் இருந்து பயணித்தது போன்று டிக்கெட் இருந்ததால் கருங்குளத்தை சார்ந்த நபர் என்று விசாரணை நடைபெற்றது.

நீண்ட தேடலுக்குப்பின்பே அந்த பெண் பக்தர் ஸ்ரீவைகுண்டத்தைச் சார்ந்தவர் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. இதுபோன்று ஸ்ரீவைகுண்டம் பகுதி பொதுமக்கள் தொடர்ச்சியாக போக்குவரத்து தொடர்பாக பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருநெல்வேலி திருச்செந்தூர் வழியாக செல்லும் பேருந்துகளை ஸ்ரீவைகுண்டத்திற்குள் வந்து செல்லவும். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு கருங்குளத்திலிருந்து ஏறியதாக கூடுதல் கட்டணத்துடன் பயணச்சீட்டு வழங்குவதை தடுத்து நிறுத்தி ஸ்ரீவைகுண்டம் பகுதிமக்கள் சந்திக்கும் போக்குவரத்து தொடர்பான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணுமாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story