அரசு அதிகாரிகள் மெத்தனம்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றசாட்டு

அரசு அதிகாரிகள் மெத்தனம்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றசாட்டு
X
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி மாவட்டம், அரூரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கையில் குறித்து மனுக்கள் கொடுத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்று கேள்விகளை முன்வைத்தனர். அரூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள அரசு அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதில்லை .அதனால் விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும் மத்திய மாநில அரசு விவசாயிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வந்தாலும் நலத்திட்டங்கள் குறித்தும் மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிப்பதில்லை. அனைத்து துறை அலுவலர்களும் மெத்தனப் போக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டை எழுப்பினார்கள். குறிப்பாக வேளாண்மை துறையின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தனியார் கிழங்கு மில் மீது 20 வருட காலமாக புகார் கொடுக்கபட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, பல்வேறு முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை குறித்து எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை என்றும், மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் அரசின் மானிய தொகை குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தெரிவிப்பதில் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் திட்டத்தில் பயன் இல்லாமல் போவதாகவும், விவசாயிகள் தொடர்ந்து அரசு அலுவலர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் விடப்பட்டு ஒரு மாத காலமாகி கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் மனுக்கள் கொடுத்து மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை எடுப்பதில் மொரப்பூர் வட்டார வளர்ச்சித்துறை மெத்தன போக்கை கடைபிடிப்பதாகவும் இதேபோன்று ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து பம்பு வழியாக நீரேற்றும் முறையை பயன்படுத்தி ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப கடந்த ஆண்டில் 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் தற்போது வரை அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் விவசாயிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாகவும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் கொடுத்தும் மனுக்கள் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நடவடிக்கையை எடுப்பதில் காலதாமதமானால் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்தனர். கூட்டத்தில் அரூர் வட்டாட்சியர் கனிமொழி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story