வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!
![வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்! வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!](https://king24x7.com/h-upload/2024/04/05/466949-image3a1000321070.webp)
கோவை மதுக்கரை வனச்சரகத்தில் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கரடிமடை மத்திப்பாளையம் குப்பனூர் பச்சாபாளையம் தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை பயிரிடப்பட்ட பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து கரடிமடை மத்திபாளையம் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. யானைகளை விரட்ட வனத்துறையினர் மெத்தனப்போக்கு காட்டி வருவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் யானைகளை விரட்ட வனத்துறை தகவல் கொடுத்தால் தாமதமாக வருவதாகவும் விவசாயிகள் யானையை விரட்டினால் அவர்களை மிரட்டி போய் வழக்கு போட்டு விடுவதாக கூறி வேதனை தெரிவித்தனர்.இந்த நிலையில் சிறுவாணி சாலை மாதம்பட்டி சந்திப்பில் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கடந்த ஒரு வாரமாக செய்தித்தாள்களில் யானை நடமாட்டம் குறித்து செய்தி வெளியான துண்டு செய்தித்தாள்களை கையில் பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு பேரூர், ஆலந்துறை தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் இடையே நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் வானத்திற்கு விவசாயிகள் வழி விட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.