நாமக்கல்: சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் தேர்தலைப் புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி இதுவரை 55 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதி விவசாயிகள் தங்களின் வீடுகளின் முன்பு தேர்தலை புறக்கணிப்பதாக நோட்டீஸ் ஒட்டிவைத்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர். இது குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் செய்தியாளர்களிடம் கூறியாதாவது: மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி, இதுவரை 55 கட்டப் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தியுள்ளோம்.

இதுவரை தமிழ் அரசு எங்களை அழைத்துப் பேசவில்லை. எங்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில், சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏப்ரல்.19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி எங்கள் வீடுகளில்கருப்புக்கொடி கட்டி எங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எங்களை அழைத்துப் பேசி சிப்காட் திட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்தால் நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் என கூறினார். கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், தண்டபாணி, ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story