"உத்திரமேரூரில் விதை புல்லுக்காக விவசாயிகள் கரும்பு சாகுபடி"

உத்திரமேரூரில் விதை புல்லுக்காக விவசாயிகள் கரும்பு சாகுபடி

 கரும்பு சாகுபடி

உத்திரமேரூர் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்து வெட்டும் பணி தீவிரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கரும்புகள், மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு எடுத்து செல்கின்றனர். படாளம் சர்க்கரை ஆலைக்கு மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கரும்பு உற்பத்தி செய்து விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தரமான விதை, தேவையான அளவுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் நேரடியாக விளைவித்து விவசாயிகளுக்கு வழங்க முடிவதில்லை என கூறப்படுகிறது. இதனால், பல விவசாயிகள் வெளியில் கரும்பு விதை புற்களை பெற்று கரும்பு சாகுபடிக்கு நடவு செய்கின்றனர். கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி, அரும்புலியூர், சாத்தணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விதை புல்லுக்காகவே விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர். இதுகுறித்து, கரும்பாக்கம் கிராம விவசாயிகள் கூறியதாவது: கரும்பு விதை புல் வாங்கும் விவசாயிகள், கரும்பு தோட்டத்திற்கு நேரடியாக வந்து தாங்களே ஆட்கள் வைத்து தேவையான விதை கரும்புகளை துண்டுகளாக நறுக்கி சொந்த செலவில் எடுத்து செல்கின்றனர். இதனால், கரும்பு வெட்டும் ஆட்கள், கூலி மற்றும் வண்டி வாடகை செலவு மிச்சமாகிறது. மேலும், விதை புல் வாங்கி செல்லும் விவசாயிகள் அதற்கான பணத்தை உடனடியாக தந்து விடுவதால், ஆலைக்கு அனுப்புவதை காட்டிலும் கரும்பை விதை பொருள்களாக விற்பனை செய்வது கூடுதல் லாபம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story