மகளை தாக்கிய வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை
![மகளை தாக்கிய வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை மகளை தாக்கிய வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை](https://king24x7.com/h-upload/2024/06/11/545553-1000324364.webp)
கோப்பு படம்
சேலம் அயோத்தியாப்பட்டணம் குள்ளம்பட்டி காலனியை சேர்ந்தவர் இளையராஜா (25). இவரது மனைவி சரண்யா (24). இவர் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த உறவுக்கார பெண்ணான சந்தியா (22) என்பவருடன் வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது இளையராஜா மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்லாமல் சந்தியாவுடனே நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்தநேரத்தில் இளையராஜா மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே மனைவி வராததால் கோபமடைந்த இளையராஜா, அங்கு சென்று சந்தியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர்.
இருந்த போதும் ஆத்திரத்தில் இருந்த இளையராஜா, திடீரென சந்தியாவின் வீட்டுக்குள் புகுந்து அவரை கெட்ட வார்த்தையால் திட்டியதோடு சரமாரியாக தாக்கி, அவரது தாலியை பிடித்து இழுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தியாவின் தந்தை சந்தோஷ், சமையல் அறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து இளையராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு நெற்றி மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.