தாரமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து

தாரமங்கலம் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் பல மணிநேரம் போராடி அணைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அதே பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து எடுக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துள்ளனர். இதனால் அந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் துர்நாற்றம் வீசி அருகில் உள்ள பொதுமக்கள் மூச்சு விடுவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதை அடுத்து அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கில் தீ பிடித்தது குறித்து ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி குப்பை கிடங்கில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் குப்பையின் அடியில் புகை மூட்டத்துடன் எரிந்து கொண்டிருந்த தீயையும் ஜேசிபி வாகனத்தை பயன்படுத்தி முழுவதும் தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story