பள்ளியாடி அருகே மீன் வியாபாரி கொலை?

பள்ளியாடி அருகே மீன் வியாபாரி கொலை?
ராஜகுமார்
பள்ளியாடியில் உள்ள நடுவந்தன்குளத்துக்குள் மீன் வியாபாரி ஒருவர் ரத்தக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த பள்ளியாடி பகுதியில் உள்ள நடுவந்தன்குளத்துக்குள் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பள்ளியாடி, முருங்கவிளை பகுதியை சேர்ந்த ராஜகுமார் (41) என்பது தெரிய வந்தது. இவர் மீது காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ் நிலைய குற்ற சரித்திர பதிவேடு பட்டியலில் இவர் பெயர் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக வேறு எந்த வழக்குகளும் இவர் மீது இல்லை என்று கூறப்படுகிறது. ராஜகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதற்கு இடையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து குளத்தின் கரையில் அமர்ந்து ராஜ்குமார் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் இவரை தாக்கி கொலை செய்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் உடலில் உரசல் , ரத்த காயங்கள் போன்றவை உள்ளது. செருப்பு தனியாக கிடந்தது. எனவே இந்த சந்தேகங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story