வேலை வாங்கி தருவதாக ஆசிரியையிடம் ரூ.13 லட்சம் மோசடி- 4பேர் மீது வழக்கு
தக்கலை அருகே மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக பள்ளி ஆசிரியையிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர் ஹெலன் (52) தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த பிரேமா (62) என்பவருக்கும் திருமண வரன் பார்த்து கொடுப்பது தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஹெலனின் மகள் ஜெனிஷா ஜெனிபர் (25) டி என் பி எஸ் சி தேர்வு எழுதி உள்ளதை அறிந்த பிரேமா, தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதன்படி சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த தர்மராஜ் (55), அவரது மகன் ஸ்டாலின் (30), வடக்கன்குளம் பகுதி சேர்ந்த பிரேமலதா (31)ஆகியோரை ஹெலனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இதை நம்பி அவர்கள் கேட்டபடி நேரடியாகவும், வங்கி மூலமாகவும், காசோலையாகவும் மொத்தம் 13 லட்சம் ரூபாய் வரை ஹெலன் கொடுத்துள்ளார். ஆனால் இவர்கள் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை. இது குறித்து ஹெலன் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி, தர்மராஜ், ஸ்டாலின், பிரேமா, பிரேமலதா உட்பட நான்கு பேர் மீது மோசடி உட்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story