குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

பேராவூரணியில் குரூப் 4 தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழகம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்புரையாற்றிய பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா திருமலைச்சாமி தனது உரையில், "நமது வெற்றிக்கு பெரிதும் ஊக்கமாக அமைவது நல்ல வீட்டுச் சூழல். உறவுகளை மேம்படுத்தும் பொழுது வெற்றி எளிதாக அமைந்து விடும். அன்பான உறவுகளை கட்டமைக்கும் பொழுது போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றியைப் பெற வேண்டும் என்கிற மன உறுதி கிடைக்கும். உங்களின் மதிப்புமிகு உலகத்திற்கான கற்பனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். கற்பனைகள் கனவுகளாக மாறும். கனவுகள் உங்கள் வாழ்வில் நிறைவேறும். குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு உறவுகளை நேசிக்கத் தொடங்குங்கள். வெற்றிகள் வசமாகும்" என்றார்

கல்விக் கழக பொறுப்பாளர் த. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மெய்ச்சுடர் நா வெங்கடேசன் வரவேற்றார். பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார், மருத்துவர் துரை. நீலகண்டன், வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் எஸ்.திருப்பதி, பொருளாளர் எல்.ஏ.எம். சாதிக் அலி, லயன்ஸ் சங்க பொறுப்பாளர் சபரி குமார், முனைவர் கணேஷ் குமார், ஆசிரியர் காஜா முகைதீன், பயிற்சி கூடத்தின் பயிற்றுநர்கள் ஆசிரியர் பொ.சிங்காரவேலு, கல்வித்துறை அலுவலர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவமணி, சிவநேசன், காளிராஜ், அருண், விக்னேஷ், சக்திவேல், சமூக ஆர்வலர்கள் சலாம், கொன்றை வெ.சிவக்குமார், மருத. உதயகுமார், இன்னிசை பாலா, தென்னங்குடி தனலட்சுமி தங்கராஜ், சேரன், லட்சுமி பிரியா, பாரதி தையல் பயிற்சிக் கூடம் நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் நோக்கம் குறித்து வட்ட சார் ஆய்வாளர் ரெ. சந்தோஷ் விளக்கிக் கூறினார். முனைவர் பா.சண்முகப்பிரியா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். பாரதி ந.அமரேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். "தொடங்கியுள்ள இந்த இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள், இனிவரும் நாட்களில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேராவூரணி நகர வர்த்தகர் கழக கட்டிடத்தில் நடைபெறும் என்றும், பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சனிக்கிழமை நடைபெறும் வகுப்பில் நேரடியாக பெயரினை பதிவு செய்து கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம்" என பயிற்சிக் கூடம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story