நடுரோட்டில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - சேலத்தில் பரபரப்பு

நடுரோட்டில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - சேலத்தில் பரபரப்பு

கைது செய்யப்பட்ட கோகுல் 

சேலம் 4 ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணை சரமாரியாக அரிவாளால் வெட்டிய இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு பஸ்சுக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த அரிவாளை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து 4 ரோடு பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இதில் அந்த வாலிபர் வீராணம் அருகே டி.எருமாபாளையம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோகுல் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரியா (29). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கணேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதனிடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கணேஷ் இறந்து விட்டார். இதையடுத்து பிரியா 4 ரோடு பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அப்போது கோகுலுக்கு, பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சந்தித்து பேசி வந்தனர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக கோகுலுடன் பேச பிரியா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல், பிரியாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குமோ? என்று சந்தேகம் அடைந்தார். இதன் காரணமாக ஆத்திரத்தில் இருந்த கோகுல், பிரியாவை கொலை செய்யும் நோக்கத்தில் அவரை அரிவாளால் வெட்டி உள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

Tags

Next Story