மின்கம்பத்தில் அரசு பஸ் உரசல்; பயணியின் கையில் முறிவு

கன்னியாகுமரி மாவட்டம் சாரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (54). இவர் கிராமிய கலை குழுக்களில் ஹார்மோனியம் வாசிக்கும் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை விஷயமாக திங்கள் சந்தை பகுதிக்கு வந்தார். பின்னர் தக்கலை செல்வதற்காக மண்டைக்காட்டில் இருந்து தக்கலை செல்லும் அரசு பஸ்ஸில் ஏறியுள்ளார். பஸ்ஸில் இடது பக்கம் கடைசி சீட்டில் அமர்ந்து இருந்தார். பஸ் இரணியல் மேலத்தெரு பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக பஸ்ஸின் பின்பக்கம் மின் கம்பம் ஒன்றில் உரசியது. இதில் முருகனின் இடது முழங்கை மின்கம்பத்தில் உரசி, கை முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவரை சக பயணிகள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிட்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாக பஸ்சை ஒட்டிய பஸ் டிரைவர் கீழ்குளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (26) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
