குமாரபாளையத்தில் கரைபுரண்டோடும் காவிரி மக்களுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு !

காவிரி கரையோரத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதியிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், ஆய்வு மேற்கொண்டு தகவல்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் இன்று சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா, தலைமையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில், மேட்டூர் அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், தெரிவித்ததாவது, மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் நண்பகல் நிலவரப்படி 1.70 இலட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை பொருத்த வரையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிகள், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அனைத்து இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 9 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு 5 மாத கர்ப்பணியும் பாதுகாப்பாக அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியில் பொதுமக்கள், இளைஞர்கள் செல்ல இயலாத வகையில் தடுப்புகள் அமைக்கபட்டு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமாரபாளையத்தில் உள்ள தரைபாலத்தில் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் சுமார் 308 வீடுகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள சுமார் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காடச்சநல்லூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 150 பயனாளிகளுக்கு இடம் அடையாளம் காணப்பட்டு விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளது. ஆசியா வளர்ச்சி வங்கி மூலம் 585 குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளில் தங்குவதற்கு 380 பயனாளிகள் சம்மந்தம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் ஆசியா மரியம், தெரிவித்தார். மேலும், குமாரபாளையம் நகராட்சி, ஜே.கே.கே நடராஜா திருமண மண்டபம், ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபம், ஸ்ரீ அய்யப்ப சேவா மண்டபம் உள்ளிட்ட நிவாரண முகாம்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், குமாரபாளையம் நகராட்சி, கலைமகள் தெரு, மணிமேகலை தெரு, பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பகுதி, குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் பகுதி, குமாரபாளையம் நகராட்சி, காவேரி நகர் தலைமை நீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபம் மற்றும் செங்குந்தர் திருமண மண்படம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு உணவு, நிவாரண பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது குறித்தும் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்தும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு, ஜனதா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசியா மரியம், ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் நகர்மன்ற தலைவர்கள் விஜய்கண்ணன் (குமாரபாளையம்), .எம்.செல்வராஜ் (பள்ளிபாளையம்), திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், நகராட்சி ஆணையாளர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story