ஓசூர் அருகே மளிகை கடை உரிமையாளர் கொலை

ஓசூர் அருகே மளிகை கடை உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராஜ் (40) இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும் திக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இன்று இரவு திம்மராஜ் அருகில் உள்ள தனது அண்ணன் கடையில் டீ போண்டா சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் திம்மராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் திம்மராஜ் உடலில் வயிறு, கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தாக்குதல் நடத்திய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த திம்மராஜை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக ஓசூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் காவல் துறையினர் மற்றும் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொலையாளிகளின் வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பதையும் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பேகேப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நடமாட்டம் உள்ள அப்பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது குறித்து ஒசூர் சிப்காட் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story