கடை அடைப்பு போராட்டம் - மளிகை கடை உரிமையாளர்கள் மறுப்பு

கடை அடைப்பு போராட்டம் - மளிகை கடை உரிமையாளர்கள் மறுப்பு
கடை அடைப்பு போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ள மளிகை கடை உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடை அடைப்பு போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ள மளிகை கடை உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நகராட்சியில் உள்ள 42 வார்டுகள் மற்றும் பிரதான தென்காசி தேசிய நெடுஞ்சாலை, முடங்கி ஆறு சாலை, டிபி மில்ஸ் சாலை உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தென்காசி சாலையில் மேம்பாட்டு பணிகளுக்கான குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் தோண்டப்பட்ட பள்ளங்கள், சாலைகள் இன்னும் சீர் செய்யப்படாமல் உள்ளது. மழை நேரத்தில் குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆழம் தெரியாமல் மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் குடும்பத்துடன் அடிக்கடி தவறி விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது.

சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வியாபார சங்கம் மற்றும் வியாபாரிகள் சார்பில் தேசிய நெடுஞ்சாலையின் நகாய் திட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று வியாபார சங்கக கட்டடத்தில் நடைபெற்றது.

ஆலோசனையின் முடிவில் வரும் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி தொடங்கி ஒன்றாம் தேதி சனிக்கிழமை மாலை 6:00 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வியாபார சங்கத்தின் நேரடி உறுப்பினர்கள் மற்றும் இணை சங்கங்களின் சார்பில் நகரில் செயல்படும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு அரசின் கவனத்தை ஈர்க்கப்பட உள்ளது என வியாபார சங்க செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த தினம் வருவதால், அதற்கு முதல்நாள் கடைகளை பூட்டி போராட்டம் நடத்தும் பட்சத்தில் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே இன்று நடந்த மொத்தம் மற்றும் சில்லறை மளிகை பொருட்கள் வியாபாரிகளின் அவசர கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில், சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.

எனவே நகரில் இயங்கும் 300க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை மளிகை கடைகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை மட்டும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பொது மக்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக சனிக்கிழமை அனைத்து மளிகை கடைகளும் திறக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்த கடிதம் மளிகை கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், வியாபார சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story