குரு பெயர்ச்சி விழா: திட்டை கோயிலில் சிறப்பு வழிபாடு

குரு பெயர்ச்சி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பகவான் தனி சன்னதியில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு புதன்கிழமை மாலை 5.19 மணிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், குரு பகவானுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டன.

பின்னர், ஹோமத்திலிருந்து கடம் புறப்பட்டு, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட கவசம் சாத்தப்பட்டது. இவ்விழாவில் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், கும்பம், தனுசு, மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்தனர். குரு பெயர்ச்சியையொட்டி, பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக இக்கோயிலில் மே 6 ஆம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், மே 7, 8 ஆம் தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளன.

Tags

Next Story