இரவு நேர கன மழை- வீடுகளுக்குள் கழிவு நீரோடு புகுந்த மழை நீர்

குளம் போல் தேங்கிய மழை நீர்
தமிழகம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் மிக்ஸாம் புயலின் எதிரொலியாக பெய்த கனமழையின் காரணமாக,பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கரூர் மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரம் பகுதியில், வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக, அப்பகுதியில் வசிக்கும் சிலர் வீடுகளுக்குள் மழை நீர் உள்ளே புகுந்து கொண்டு, பல மணி நேரமாக வெளியேறாத காரணத்தால் பொதுமக்கள் கட்டில்கள் மற்றும் நாற்காலிகள் மேல் அமர்ந்து, தூக்கத்தை இழந்த சூழ்நிலை ஏற்பட்டது. இப்பகுதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால், பல இடங்களில் மழைநீர் வழித்தடங்கள் சரிவர அமைக்கப்படாத காரணத்தால், மழைக்காலங்களில் தொடர்ந்து இதேபோன்ற சூழ்நிலை ஏற்படுவதாக அப்பகுதியினர் குறை கூறினர். மழைக்காலங்களில் தொடர்கதையாகி வரும், இந்த பிரச்சனையை சரி செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
