கீழடி அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

கீழடி அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

கீழடி அகழாய்வு 

கீழடி அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ளது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் மதி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கீழடி அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் பணியமர்த்த வேண்டும். இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழக அரசிடம் மத்தியஅரசு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கீழடி இரண்டாம் கட்ட அழகாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்" எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது" எனத் தெரிவித்தனர். முன்னதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச்சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 26 ஆம் தேதி (26.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்" எனத் தெரிவித்திருந்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்திருந்த உத்தரவில், "கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story