வீடு புகுந்து பொருட்கள் சேதம்

வீடு புகுந்து பொருட்கள் சேதம்
சிவகிரியில் வீடு புகுந்து டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதம்
தென்காசி மாவட்டம்,சிவகிரியில் வீடு புகுந்து டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரம் மேலத்தெருவை சேர்ந்த வீரையா மகன் மாரிக்கனி (18). இவர் தனது உறவினர்களுடன் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்துள்ளார். அப்போது மாரிக்கனி ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ராயகிரி பிரதான சாலையை சேர்ந்த தங்கத்துரை மகன் ஹரி (20) என்பவரை தவறுதலாக மிதித்துள்ளார்.

இதையடுத்து மாரிக்கனி மற்றும் அவரது உறவினர்களுடன் ஹரியும், அவர்களது நண்பர்களும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு போலீசார் வந்தவுடன் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாரிக் கனியின் வீட்டிற்கு சென்ற ஹரி மற்றும் ஐந்து பேர் வீட்டில் புகுந்து டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை உடைத்துள்ளனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர். இதை தடுத்த மாரிக்கனியின் தாயை தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிவகிரி போலீசார் ஹரி உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story