மனித சங்கிலி போராட்டம்

திருச்சி தஞ்சை சாலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவோர் மீது சுமத்தப்பட்ட கடுமையான மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து திருவெறும்பூர் கணேசா பெல் ரவுண்டானா பகுதியில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து நின்று நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர் போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகில் பே ராஜப்பா தலைமை வகித்தார்.

பெல்சியா மோகன், பிடாஸ் இயக்குனர் தொழிலதிபர் குமார், திருச்சி அனைத்து சிட்கோ தொழிற்பேட்டையின் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளரை ஏடிபி கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், துவாக்குடி அதிமுக நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே பி செந்தில்குமார் மற்றும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தின் கோரிக்கைகளாக தொழில்துறை மின் நுகர்வோரின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 430 சதவீத நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டியும், ஆண்டுதோறும் உயர்த்த உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வைத் திட்டத்தை கைவிட கோரியும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 15 சதவீத பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டியும் கோரிக்கைகளாக வைக்கப்பட்டது. போராட்டத்தில் பல்வேறு தொழில்துறை மின் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story