குடும்ப தகராறில் மனைவிக்கு கத்தி குத்து - கணவன் கைது

குடும்ப தகராறில் மனைவிக்கு கத்தி குத்து  - கணவன் கைது
மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு மடத்துவாசல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36), இவருக்கும் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் வாட்டாகுடி இரணியன் நகரை சேர்ந்த சந்தியா (24) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சந்தியா வேறொரு நபரை காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பிறகும் அவருடன் சந்தியா மீண்டும் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு சந்தியா, மதுக்கூர் வாட்டாக்குடியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கணவர் சுரேஷ் சந்தியா வீட்டிற்கு சென்று, அவர் கொடுத்த பணம் நகைகளை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது கணவன் - மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து சந்தியாவை குத்தி விட்டு தலைமறைவாகி விட்டார். இதில் காயமடைந்த சந்தியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இது தொடர்பான புகாரின் பேரில் மதுக்கூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேசை கைது செய்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story