ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிலைகள் மாயம்: அதிகாரி புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிலைகள் மாயம்: அதிகாரி புகார்
ஆண்டாள் கோயில் 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் மற்றும் சிலைகள் காணவில்லை என நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரங்கள் மற்றும் கற்சிலைகள் காணவில்லை என செயல் அதிகாரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஸ்தலமாகும்.

இக்கோவிலில் வருடம் தோறும் திருவாடிப்பூரஉற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இவ் விழாக்களில் கலந்து கொள்ள தமிழக மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

இந்நிலையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் அமைந்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்று அளித்துள்ளார் அதில் கடந்த 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் குடமுழுக்கு விழா மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றது.

குறிப்பாக திருக்கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் போது விழாக்கள் ஆரம்பமாகும் போது கொடியேற்றும் கொடி மரங்கள் மூன்றும் அகற்றப்பட்டு புதிய கொடி மரங்கள் நிர்மாணிக்கப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட பழமையான மூன்று கொடி மரங்களில் செப்பு தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது.

இச்செயல் சட்ட விரோதமான செயலாகும் காணாமல் போன இரண்டு கொடி மரங்கள் குறித்து விசாரித்தபோது திருக்கோவில் வெள்ளை அடிப்பு பணியை செய்வதற்காக ஏலம் எடுத்த ரமேஷ் என்ற ராமர் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகிய இருவரும் லாரி மூலம் கொடி மரங்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்தது.இது சட்டவிரோத செயலாகும்.

ஆகையால் மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். மேலும் முன்னதாக கடந்த 2008,2009 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் அருகே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தின் வாசற்படியில் அமைக்கப்பட்டிருந்த பழமையான கற்களான யானை சிலைகள் இரண்டு காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மரங்கள் சட்டவிரோதமாக வெளியே எடுத்துச் சென்ற சம்பவம் ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story