இளந்தோப்பு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

இளந்தோப்பு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது

மயிலாடுதுறை அருகே மகாசக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் , கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே இளந்தோப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 26ம் தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, மகாலட்சுமி பூஜை, தன பூஜை, கோ-பூஜை மற்றும் வாஸ்து சாந்தி செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணா குதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அங்கு வான வேடிக்கையுடன், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story