நான் முதல்வன் திட்டம் - ஆட்சியர் விழிப்புணர்வு

நான் முதல்வன் திட்டம் - ஆட்சியர் விழிப்புணர்வு

 நான் முதல்வன் திட்டம்

விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் நடந்த நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு வழங்கினார்.

விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவ, மாணவியர்களிடையே வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்: தமிழக அரசு, மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.

நான் முதல்வன் இணையதளம் மூலம் பல்வேறு படிப்புகள் பற்றிய அவ்வப்போதைய சமீபத்திய தகவல்களும், தொழில் துறைகளுக்குத் தேவையான குறிப்பிட்ட திறன்கள் தொடர்பான தகவல்களும், கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களும் வழங்கப்படுகின்றன. இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கை இலட்சியங்களை அடையும் வகையில், தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற உதவுகிறது.

தொழில்துறையில் தற்போதுள்ள பணியிடங்களின் இடைவெளிகளை நிரப்பக்கூடிய திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திறன் பயிற்சிகளை அவர்களுக்கு அளிப்பதற்கான ஆற்றல்மிகு பயிற்றுனர்களை அடையாளம் காண்பதும் இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.. இந்த முதன்மை திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயிற்சி பெற முடியும். தங்களுடைய திறன்களுக்கு ஏற்ப அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதையும் இத்திட்டம் உறுதி செய்கிறது. மாநில கல்வி நிறுவனங்களில், மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். நான் முதல்வன் தளத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் குறித்தும், 300-க்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கான பாதைகள் குறித்தும் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அளவில் போட்டித்தேர்வு மூலமாக ஆண்டிற்கு யு.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி, பொதுத்துறை நிறுவனங்களில் ஏறத்தாழ 3 இலட்சம் வேலைவாய்ப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டித்தேர்வுகளுக்கு பெரும்பாலும் பகுத்தறிவு(Reasoning), திறனறிவு(Quantitative Aptitude), ஆங்கிலம், பொது அறிவு ஆகிய 4 பிரிவுகளில் அடிப்படை புரிதலோடு, தங்களது திறமையை கல்லூரியில் படிக்கும் போதே வளர்த்துக் கொள்ளும் போது, போட்டித்தேர்வுகளில் வெற்றியடையலாம். நான் முதல்வன் இணையதளத்தில் இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. போட்டித்தேர்வுகளுக்காக சமூக ஊடகங்களில் எண்ணற்ற இலவச வகுப்புகளும் உள்ளன. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதியிலிருந்து வரக்கூடிய மாணவர்கள் வெளியில் இருக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகள் குறித்த அறியாமை உள்ளது. அதற்கான விழிப்ப்புணர்வு இருக்க வேண்டும். முதலில் என்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

திறமை வாய்ந்தவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புகள் இருக்கின்றன. படிப்பு, பொருளாதாரம், சமூக சூழல், குடும்ப சூழல், அறிவு உள்ளிட்டவைகளில் நம்மைவிட பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் கூட, நாம் நினைத்து கூட பார்க்க முடியாத தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதை புரிந்து கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். தற்போதைய நிலையில் நாம் தவறவிடும் வாய்ப்புகளுக்கு, அடுத்த ஆண்டில் அதே மாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்திலே மாணவர்கள் தங்களுக்கான செயல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அடிப்படை அறிவு மற்றும் தொடர்ச்சியான முயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே மாணவர்கள் தங்களுக்கான திறமைகளை வளர்த்துக் கொண்டு நல்ல வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் குடும்பத்தினையும், இந்த சமுதாயத்தையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை மாணவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story