திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் தொடக்கம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் , திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கப்படுகிறது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்‘ என்ற புதிய திட்டம் திங்கள்கிழமை (டிச. 18) தொடங்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி நகராட்சிகளில் 25 முகாம்கள், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், செங்கம், புதுப்பாளையம், போளூா், களம்பூா், கண்ணமங்கலம், சேத்பட், தேசூா், பெரணமல்லூா் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் 20 முகாம்கள் என மொத்தம் 40 சிறப்பு முகாம்கள் டிச. 18 முதல் ஜன. 4-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயா் மாற்றம், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீா் வரி பெயா் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் ‘மக்களுடன் முதல்வா்‘ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 30 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். இணையவழி விண்ணப்பம் எனில் முகாம்களிலேயே இணைய வழியில் பதிவு செய்யப்படும். அனைத்து முகாம்களிலும் இ-சேவை மையத்தில் பதிவேற்றப்படும் மனுக்களுக்கான சேவைக் கட்டம் 50 சதவீதம் மட்டுமே பெறப்படும். எனவே, பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story