பெரம்பலூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்

பெரம்பலூரில்  மக்களுடன் முதல்வர்  திட்டம் துவக்கம்
X

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்  

தமிழகத்தில் அரசு அதிகாரிகளை பொதுமக்கள் சந்திப்பதை தவிர்த்து, அதிகாரிகளே நேரடியாக பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்திடும் வகையிலான மக்களுடன் முதல்வர் திட்டம் பெரம்பலூரில் இன்று துவங்கியது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் தங்களது குறைகளையும், தேவைகளையும் அதிகாரிகள் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து மனுவாக கொடுத்து தீர்வு பெறுவதை தவிர்த்து, அதிகாரிகளே பொதுமக்களை அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்வு கண்டிடும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு சென்று அனைத்து துறை சார்ந்த மனுக்களை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்க வேண்டும். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முறையாக வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3,4,12, 13, வார்டு பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கியது.

இதில் வருவாய் துறை, வேளாண் துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை என அனைத்து துறையின் சார்பில் அலுவலர்கள் நேரில் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்த மனுவினை பெற்றனர். அவற்றில் பலவற்றிற்கு உடனடி தீர்வும், பல மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து தீர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் துணைத் தலைவர் ஹரி பாஸ்கர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணி ஆட்சியாளர் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு அரசு துறையில் முதன்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story