தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

சங்ககிரியில் திமுக கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
நாமக்கல் மக்களவை தொகுதி இந்தியா கூட்டணியில் சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா சங்ககிரியில் நடைபெற்றது. திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து இந்தியா கூட்டணியின் சார்பில் சங்ககிரி ஒன்றிய திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தை சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கினை ஏற்றி வைத்து திறந்து வைத்தார். பின்னர் அலுவலக வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் உடனடியாக தேர்தல் பணிகளை துவங்குமாறு அறிவுறுத்தினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அக்கட்சியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன், திமுக மாவட்ட துணை செயலாளர் க.சுந்தரம், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.தங்கமுத்து, நகர செயலாளர் கே.எம்.முருகன், பேரூராட்சித்தலைவி எம்.மணிமொழிமுருகன், மகளிரணி நிர்வாகி நிர்மலா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story