திருத்தணியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் 66 நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா பருவ நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கௌசல்யா, ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் நடப்பு சம்பா (2023) பருவத்தில் (KMS 2023-24) 50763 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50,000 மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்ய வட்டம் வாரியாக, ஆவடி-2, பூந்தமல்லி-2, பொன்னேரி -18, கும்மிடிப்பூண்டி-4, ஊத்துக்கோட்டை-9, திருவள்ளுர் -18, திருத்தணி-9, பள்ளிப்பட்டு-1, ஆர்.கே.பேட்டை-3 என மொத்தம் 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது.

அரசு கட்டிடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (TNCSC) சார்பில் 61 நிலையங்களும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம்(NCCF) சார்பில், 5 என மொத்தம் 66 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தேவைகேற்ப படிப்படியாக திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

முதலமைச்சர் ஆணையின் படி விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் சன்னரக ( Grade a variety ) நெல் ரூ.2310-ற்கும், பொது ரக (CommonVariety) நெல் ரூ.2265-ற்கும் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்மணிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க ஏதுவாக டெல்டா மாவட்டத்திற்கு இணையாக திருவள்ளுர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டம் குருபுரம் கிராமத்தில் முதல் முறையாக 5 ஏக்கர் பரப்பளவில் 10,000 மெ.டன் (1000 மெ.டன் வீதம் 10 எண்கள்) நெல் மணிகள் சேமித்து வைப்பதற்கான மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய ஏதுவாக பச்சரிசி 3933 மெட்ரிக் டன்னும், புழுங்கல் அரிசி 3961 மெட்ரிக் டன்னும் தயார் நிலையில் அரசுக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர அரவைமில்களில் பச்சரிசி 543 மெட்ரிக் டன்னும், புழுங்கல் அரிசி 1531 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்ய தயார் நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் பொது விநியோகத் திட்டத்திற்கு 9968 மெ.டன். அரிசி திருவள்ளுர் மாவட்டத்தில் இருப்பில் உள்ளது என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி, துணை இயக்குநர் (வேளாண்மை) சுசீலா, துணை மேலாளர் பரமேஸ்வர ராஜா, கண்காணிப்பாளர் குழஞ்சிமணி, உதவி இயக்குநர் பிரேம், முன்னாள் மார்க்கெட்டிங் கமிட்டி தலைவர் ரவி. விவசாய பிரதிநிதிகள், நெல் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story