ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா துவக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தினமும் காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடந்தது.மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று 29-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 8-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story