புதுப்பட்டினத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி
புதுப்பட்டினத்தில் அதிமுக சார்பில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அதிமுக கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ் அலி ஏற்பாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை தொடர்ந்து அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான பா.வளர்மதி கலந்து கொண்டு அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த கல்பாக்கம் பகுதி மாணவிகளுக்கும் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியருக்கும் பதக்கத்துடன் ரொக்கமாக ஊக்கத்தொகை வழங்கி மாணவிகளை வாழ்த்தினார்.. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற விளையாட்டு அணிக்கு கோப்பையும் ரொக்க தொகையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 70 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாவட்டத் துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணூர் பக்தவச்சலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பையனூர் குமார்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஜி கே பாபு, ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன், ஓ எம் சுரேஷ், ஒன்றிய அம்மா பேரவை பொறுப்பாளர் அராபத் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.