அரசு பஸ்களை சிறைபிடித்த சம்பவம் : 20 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சேனம் விளை பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தடம் எண் 6ஏ என்ற அரசு பஸ்சை முறையாக இயக்க கேட்டு நேற்று முன் தினம் சேனம் விளை சந்திப்பில் சாலையில் அமர்ந்து, அந்த பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்களும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இதையடுத்து குளச்சல் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட பஸ்களை விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் தனசீலன் (52) என்பவர் குளச்சல் போலீசில் அரசு பஸ்ஸை வழிமறித்து தர்ணா செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போராட்டம் நடத்திய 17 ஆண்கள் 3 பெண்கள் உட்பட 20 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
